Wednesday, January 4, 2012

இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்

மனிதன் காட்டுமிராண்டியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று மனிதனாக வளர்ந்து வருகிறான். ஆதிகாலத்தில் மனிதன் மிருகத்துக்கும் அவனுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வாழ்ந்தான்.

உலகத்திலேயே வெறும் 50 இலட்சம் மக்கள் மட்டும் வாழ்ந்த காலம் உண்டு. அந்த காலத்தில் கடவுள் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை. வேதத்தில் கூட கடவுள் என்ற சொல் கிடையாது.

2000, 3000 வருடங்களுக்குள் தோன்றியதுதான் இந்த கடவுள் சங்கதி. அதுவும் இந்த கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளை உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாக பெருக்கிவிட்டான்.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்று சொன்னான். அந்தக் கடவுளை காட்டுமனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலையெல்லாம் சடை, காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடியிருக்கிற இடமோ சுடுகாடு. கையிலிருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவையெல்லாம் மனிதனுக்கு இருக்கிற யோக்கியதையா? இவையெல்லாம் காட்டுமிராண்டிதனமான சின்னங்கள் அல்லவா?

வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்கு கடவுளை உண்டு பண்ணினான்.

வெள்ளைக்காரன் - கடவுள் ஜூபிடர்
பார்ப்பான் அதற்குக் கொடுத்த பெயர் இந்திரன்

வெள்ளைக்காரன் - மைனாஸ்
பார்ப்பான் - எமன்

வெள்ளைக்காரன் - நெப்டியூன்
பார்ப்பான் - வருணன்

வெள்ளைக்காரன் - லூனஸ்
பார்ப்பான் - சந்திரன்

வெள்ளைக்காரன் - சைனேஸ்
பார்ப்பான் - வாயு

வெள்ளைக்காரன் - அப்பலோ
பார்ப்பான் - கிருஷ்ணன்

வெள்ளைக்காரன் - மெர்க்குரி
பார்ப்பான் - நாரதன்

வெள்ளைக்காரன் - மார்ஸ்
பார்ப்பான் - கந்தன்

இப்படி வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பியடித்தவன்தான் இந்த பார்ப்பான். அப்படி காப்பியடித்த கடவுள்களுக்கும் கதை எழுதி, புராணங்கள் எழுதி பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்துவிட்டான். அதை அப்படியே தமிழன் ஏற்றுக்கொண்டுவிட்டான்.

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது. கைக்கு சிக்காது. புத்திக்கு எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படி கடவுளை நம்புவது என்று கேட்டால் நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்திருக்கிறான். இதையேதான் கிறிஸ்தவனும் துலுக்கனும சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் இவையெல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்கவேண்டிய கருவிளெல்லாம் கடவுளுக்கு எதற்கு?

ஒன்றும் வேண்டாத கடவுளுக்கு ஆறுகால பூசை எதற்கு? எந்த மடையன் கடவுள் சோறு தின்னுவதைப் பார்த்தான்? பார்த்திருந்தால் சொல்லட்டுமே!

கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்லமுறையில் கற்பித்திருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தருடைய மனைவியைக் கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்தாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே. ஏற்றுக்கொள்கிறேன்.

பார்ப்பானின் இந்தக் கடவுளை ஏற்றுக்கொண்டால் நாம் சாத்திரப்படி சூத்திரன்தானே.

இந்து என்று நாம் ஒப்புக்கொள்ளும் வரை இந்தியா என்ற ஒன்று இருக்கும் வரை நாம் சூத்திரன்தானே.

தோழர்களே! இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால் அது பார்ப்பானால் மட்டுமல்ல. நாமே அதை ஒத்துக்கொண்டிருக்கிறோம். பார்ப்பான் நம்மை சூத்திரன் என்று சொல்ல பயந்துவிட்டான். ஆனால் நாமோ இந்து என்று ஒப்புக்கொண்டு கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும் நெற்றியில் சாம்பலைப் பூசிக்கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

அவனவன் மந்திரியாகப் போகவும் பெரியமனிதனாகவும் ஆசைப்படுகிறானே தவிர இந்தப் பிறவி இழிவை ஒழிக்க யார் முன்வருகிறான்?

தோழர்களே! நமது இன இழிவை ஒழித்துக்கட்ட நாம் முன்வரவேண்டும். அதற்கு முதற்படியாக இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாகவேண்டும்.

நமது நாடு நமக்காகி சட்டம் போட்டுக்கொண்டாலொழிய நமது இழிவு நீங்க வேறு மார்க்கம் கிடையாது.

தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாறியாகவேண்டும். நாடு பிரிந்து போனால் ஒன்றும் குடி முழுகிப்போகாது. நமக்கு எல்லா வளங்களும் இருக்கின்றன. நம்முடைய நாடு நமக்காகுமானால் நாம் நினைக்கிறபடி சட்டங்கள் இயற்றிக்கொள்ளலாம்.

நமது இனம் வாழ, நமக்கு மேலே எவரும் ஆதிக்கம் செய்யக்கூடாது. எல்லாம் தமிழர்களுக்காகவே இருக்கவேண்டும் என்ற நிலைமை உருவாக நாம் சுதந்திர நாடு பெற்றாகவேண்டும்.

29-08-1973 அன்று சிதம்பரத்தில் பெரியார் ஆற்றிய உரை.