Tuesday, December 20, 2011

''யார் இங்கே சி.எம்.? நானா? சசியா?"-மந்திரிகளிடம் கொந்தளித்த ஜெ.- ஜூனியர் விகடன் நடப்பு இதழில் இருந்து.

''பெங்களூரு நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற சுதாகரனுக்கு ஒரு பக்கத்தில் சசிகலாவும் இன்னொரு பக்கத்தில் இளவரசியும் உட்கார்ந்த விவகாரம்தான், அதிரடிகளுக்குக் காரணமாகிவிட்டது. சுதாகரனின் நட்பு வட்டாரத்துப் பிரமுகர் ஒருவருக்கு தமிழக போலீஸ் அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லையை மீறிச் செய்த உதவிகளும் முதல்வரை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. இத்தகைய நிலையில் சென்னையில் உருவாக இருக்கும் புதிய ரயில் திட்டத்தில் டெண்டர் விட்டதில் விளையாடிய கைகள் குறித்து, முழுத் தகவலும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன!''

''ஓஹோ!''

''பெங்களூருவில் சசிகலா இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திய மேல்மட்ட அதிகாரிகள், முதல்வரிடம் இதுவரை சொல்ல முடியாமல் தவித்த பல தகவல்களைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள். 'இந்த ரயில் திட்டத்தில் பங்கேற்பதில், முக்கியமான விதி ஒன்று உண்டு. அந்த விதியை முதல்வர் கவனத்துக்கு வராமல் திருத்தி விட்டார்கள்’ என்று சொல்லப்பட்டதாம். அதற்கு யார் காரணம் என்று முதல்வர் கேட்க, அந்த அதிகாரி அழைக்கப்பட்டு, லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கப்பட்டார். இந்த அதிகாரிக்கு அத்தகைய அதிகாரத்தையும் தைரியத்தையும் கொடுத்தது சசிகலாவா என்ற சந்தேகம் முதல்வருக்கு வந்தது. 'எனக்கே தெரியாமல் இது மாதிரி இன்னும் எத்தனை நடக்கிறது?’ என்று கொந்தளித்த முதல்வர்... முக்கிய அமைச்சர்கள் அனைவரையும் கார்டனுக்கு அழைத்தார்.''

''அப்புறம்?''

''அன்று காலை போயஸ் கார்டனில் உளவுத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினாராம் ஜெ. அதன் பிறகு கார்டனில் உள்ள உதவியாளரை அழைத்த ஜெ., 'சென்னையில் இப்போது இருக்கும் அனைத்து அமைச்சர்களையும் உடனே வரச் சொல்லுங்கள்’ என்று உத்தரவு போட்டாராம். அந்த நேரத்தில் சென்னையில் இருந்த ஏழு அமைச்சர்களுக்கும் விஷயம் சொல்லப்பட்டது. ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், என்.சி.சம்பத், கோகுல இந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள். ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாகத் தனது அறைக்கு வரவழைத்துப் பேசினாராம் ஜெ. 'இங்கே நான்தான் சி.எம். அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா? எந்த விஷயத்தையும் நீங்க என்கிட்ட சொல்றது கிடையாது. யாருகிட்ட சொல்றீங்கன்னு எனக்குத் தெரியலை. எதுவா இருந்தாலும் இனி என்கிட்டதான் சொல்லணும். அவங்க சொன்னாங்க... இவங்க சொன்னாங்கன்னு ஏதாவது செஞ்சா, நீங்க யாரும் அமைச்சரா இருக்க மாட்டீங்க. ஒவ்வொருத்தரும் யாரு பேரைச் சொல்லி ஆட்டம் போடுறீங்கன்னு எனக்குத் தெரியும். எல்லா விஷயமும் என் கவனத்துக்கு வந்துக்கிட்டுத்தான் இருக்கு’ என்று ஏகத்துக்கும் திட்டித் தீர்த்தாராம்!

''யாரு சி.எம். நானா? சசிகலாவா?'' என்று ஓர் அமைச்சரிடம் கேட்டபோது, அதிர்ந்துவிட்டார் மனிதர்!''

''சொல்லும்... சொல்லும்!''

''அமைச்சர் ஒருவரிடம், 'வேளாண்மைத் துறைக்கு யார் அமைச்சர்?’ என்று ஜெயலலிதா கேட்டாராம். அதற்கு அவர், 'தாமோதரன்ம்மா...’ என்று வளைந்து நெளிந்து சொன்னாராம். 'தாமோதரன் பேருக்குத்தான் அமைச்சரா இருக்கார். வேளாண்மைத் துறையில் அதிகாரியாக இருக்கும் பொன்னுசாமி என்ற அதிகாரிதான் அத்தனை வேலைகளையும் செஞ்சிட்டு இருக்காராமே. அக்ரி டிபார்ட்மென்ட் மீட்டிங்ல, அமைச்சருக்கே அந்த ஆள் உத்தரவு போட்டிருக்கார். போன ஆட்சியில நேரு பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த பொன்னுசாமிக்கு இன்னைக்கு அத்தனை அதிகாரம் கொடுத்து வெச்சிருக்கீங்க. அந்த பொன்னுசாமி நேருகூட நெருக்கமாக இருந்தது... நேருவைக் கடலூர் ஜெயில்ல போய் பார்த்தது வரைக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு. யாரோட சப்போர்ட்ல இப்படி ஒவ்வொருத்தரும் ஆட்டம் போடுறீங்கன்னு எனக்கு ரிப்போர்ட் வந்துட்டுத்தான் இருக்கு. சீக்கிரமே எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன்’ என்று கொந்தளித்து இருக்கிறார்.

- ஜூனியர் விகடன் 'மிஸ்டர் கழுகு' பகுதியில் இருந்து.