Friday, January 27, 2012

தமிழகக் கடற்றொழிலாளர்கள் பிரச்சினையில் மக்கள் ஒன்று திரண்டு போராட அழைப்பு.

சிறிலங்காக் கடற்படையினரால், தமிழகக் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.


தமிழகம் கோவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அக் கட்சியின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் சிறிலங்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தி வந்த பின்னரும் கூட தமிழக கடற்றொழிலாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்தவிடம் இந்திய உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும் எமது கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். அப்போதுதான் தமிழகக் கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.