Monday, December 26, 2011

முல்லைப் பெரியாறு: கோவையில் நாம் தமிழர் மறியல்- சீமான் கைது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து சீமான் தலைமையில் கோவை எல்லைப் பகுதியில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிடுவது என்பதில் கேரள அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்சனையாகி வருகிறது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச் சென்ற தமிழக பக்தர்களின் வாகனங்கள் தொடர்ந்து கல் வீசித் தாக்கப்படுகிறது.

இதற்கு எதிர் வினையாக கேரளத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடந்து வருகிறது. இந்தி நிலையில், இப்பிரச்சனையில் பதற்றத்தை குறைக்கவும், முல்லைப்பெரியாறு அணைக்கு பாதுகாப்பு கொடுக்கவும் மறுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து கேரளத்திற்குச் செல்லும் சாலையில் தொடர்ந்து மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இன்று காலை கோவை கா.கா.சாவடியருகே திரண்ட நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கேரளத்திற்கு எதிராகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். காலை 11.30 மணி முதல் 3.00 மணி வரை சாலை மறியல் நடந்தது. இதில் சீமான் பேசினார்.

அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சீமானும் கைதாகியுள்ளார்.