Monday, April 23, 2012

நாங்கள் மன்னித்தோம் சரி.. நீங்கள் ஏன் மன்னித்தீர்கள்?

நான் மதிமுகிலன். அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தில் ஒரு நிறுவனத்தின் தலைமை மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிகிறேன். சென்னையில் ஒரு திராவிட/சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில் இருந்து வந்தவனாய் இருந்தாலும் எனக்கு அரசியல் ஆர்வமெல்லாமல் இருந்ததில்லை. தமிழ் மொழி மீதும் எனக்கு பற்று இருந்ததில்லை.
திராவிட இயக்க குடும்பத்தில் எப்படி வளர்க்கபடுவார்களோ அப்படியே நானும் கொஞ்சம் அரசியல் சொல்லிக்கொடுத்து ஆனால் அரசியல் கூடாது என்று சொல்லி வளர்க்கப்பட்டேன். தேவையற்ற இடங்களில் கூட பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாடி வந்திருக்கிறேன். "I hate Politics" என்பதை பல முறை உச்சரித்திரிருக்கிறேன். என்னுடைய ஈடுபாடெல்லாம் திரைப்படங்கள் பற்றியும், கிரிக்கெட் பற்றியும், வார இறுதியில் எப்படி குடித்துக் கூத்தடிக்கலாம் என்பது பற்றியும் தான் இருந்தது. நான் தமிழகம் வந்தே ஆறு வருடம் ஆகிறது. இந்த ஆறு ஆண்டுகளாக இணையம் மட்டுமே எனக்கு தமிழகத்தில் நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் இடமாக இருந்தது.

என் இனம் ஈழத்தில் கொன்றொழிக்கப்பட்ட போதும் கூட அதை இணையத்தில் படித்து விட்டு, உச்சி கொட்டி விட்டு "வருத்தமாக தான் இருக்கு, இருந்தும் நம்மால் என்ன செய்ய முடியும்?" என்று யோசித்தவன் நான்.ராமேஸ்வரத்தில் திரைப்படத் துறையினர் ஈழத் தமிழர்களுக்காக நடத்திய போராட்டத்தில் போது "திரைப்படத்துறையினர் எல்லாம் பேசி இருக்காங்க. நீயும் போய் youtube ல பாரு" என்ற நண்பனின் அறிவுரைக்கு இணங்க சென்று திரைப்படத் துறையினரின் உரைகளைக் கேட்ட நான், அண்ணன் சீமான் ஆற்றிய உரை கேட்ட போது செவிட்டில் அறைதார் போல் உணர்தேன். அண்ணனின் மற்ற கானோளிகளையும் இணையத்தில் தேடி பார்க்கலானேன். அண்ணன் சீமான், அண்ணனின் அண்ணன் கொளத்தூர் மணியுடன் பெரியார் திராவிட கழக தோழர்களின் இல்ல நிகழ்வுகளுக்கு சென்று அங்கு உள்ள மக்களின் முன்னால் பகுத்தறிவுக் கருத்துக்களை முன்வைத்துப் பேசியது என்னைப் பெரிதும் ஈர்த்தது. தோழர்களின் நிகழ்வுக்குச் சென்றோமா, உண்டோமா, பரிசுப் பொருட்களை வாங்கினோமா, வந்ததற்காக அழைத்தவர்களைப் புகழ்ந்து நாலு வார்த்தை பேசி விட்டு வந்தோமா என்றல்லாமல் பகுத்தறிவு சிந்தனை இல்லாது போன மக்களிடம், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழிப் பற்று, தமிழ் தேசிய சிந்தனைகள் பற்றி துணிவுடன் அண்ணன் பேசியது என்னை அவர்பால் ஈர்த்தது .

எளிய நடையில், நகைச்சுவை கலந்து அண்ணன் பேசியது என்னை ரசித்துச் சிரிக்க வைத்தாலும், ஆழமாக சிந்திக்கவும் வைத்தது. ஈழம் என்பது தமிழர்கள் பிழைக்கப் போன நாடல்ல (எனக்கு ஈழ வரலாற்ரை சொல்லித் தந்தவர்கள் அப்படித்தான் சொல்லித் தந்தனர்), அங்கு விடுதலைப் போராட்டம் எப்படித் துவங்கியது, அற வழிப் போராட்டம் ஏன் ஆயுதப் போராடாமாக மாறியது, ஈழ விடுதலை அங்கு உள்ள தமிழர்களுக்கு மட்டுமன்றி ஏன் உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்குமான விடுதலை, தமிழர்களுக்கென்று ஏன் ஒரு தேசம் என் தேவை, இது போன்ற பல வரலாற்று உண்மைகளை, வரலாற்றில்/அரசியலில் எந்த ஈடுபாடும் இல்லது இருந்த நான் அண்ணன் மூலமாகவே தெளிவு பெற்றேன்.

நான் எல்லாம் ஒரு அரசியலில் ஈடுபடுவேன், அரசியல் கட்டுரை எழுதுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஜெயலலிதா பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக திமுகவிற்கு வாக்களித்திருக்கிறேன் அதுவே என் உச்சபட்ச அரசியல் செயல்பாடு. திமுகவும் பிழைப்பு அரசியல் தான் நடத்துகிறது என்பதை உணர்ந்து தான் இருந்தேன். இருப்பினும், எல்லாரும் தான் திருடுகிறார்கள், அவர்களுக்கு இவர்கள் பரவாஇல்லை, நம்மால் வேறு என்ன செய்ய முடியும் முன்பு எண்ணம் கொண்டிருந்த நான், இன்று தமிழின விரோத சக்திகளுக்கு மாற்றாக தமிழர்களே கட்டி எழுப்பிய நாம் தமிழர் இயக்கத்தின் உறுப்பினர், இரண்டு ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சிக்காக பணியாற்றுகிறேன் என்பதில் எனக்கே ஆச்சரியம். பெரியார் சொன்ன திராவிடத்தின் பொருள் என்ன, இன்று அது எப்படித் திரிந்தது, அதனால் இன்று ஏன் அது பயனற்றுப் போனது, இன்றைய காலத்திற்கு ஏன் தமிழியம் தேவை, தமிழர்கள் ஒன்றாதல் ஏன் அவசியமாகிறது, அதற்க்கு சாதிக் கட்டமைப்பு எவ்வாறு தடையாக இருக்கிறது போன்ற கருத்துக்களை விவாதிக்கும் அளவிற்கு என் சிந்தனை வளர்ந்ததற்கு அண்ணன் சீமானுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். என்னை போன்ற பல இளைஞர்கள் இன்று இந்த அரசியலில் இருக்கிறோம் என்றால் அது அண்ணன் சீமனால் தான்.

சமீபத்தில் முகநூலில் தமிழ்ச்செல்வன் என்ற வலைப்பூவில் வந்த கட்டுரை படித்து வெறுப்பானேன்..அண்ணன் சீமானை முதலில் இந்துத்துவாவாதிகள் சைமன் என்று விமர்சித்து பார்த்திருக்கிறேன், அடுத்து வீரமணியின் பெரியார் கார்பரேசன் ஆட்கள் விமர்சித்து பார்த்திருக்கிறேன், கலைஞரின் திமுக பிரைவேட் லிமிடெட் ஆட்கள் விமர்சித்ததை படித்திருக்கிறேன். இது யார் என்று யோசித்து அண்ணன்களிடம் கேட்ட பொழுது தான் அது தோழர் விஜயசங்கர் எழுதியிருக்கிறார் என்று அறிந்தேன், அவர் நோர்வே மக்களவையில் தேர்வு செய்யப்பட்டவர் என்று செய்திகளில் படித்திருக்கிறேன். பிறகு விசாரித்த பொழுது தான் அவர் மதிமுக ஐயா வைகோ வார்ப்பு என்று தெரிந்து கொண்டேன். முதல்வர் கனவு கொஞ்சமும் இல்லாது தமிழக மக்களுக்காக சேவை மட்டுமே செய்துவரும் 'ஐயா' வைகோ அவர்களின் கட்சிக்காரரின் மகன் விஜயசங்கர் தன் கட்சிக்கு ஆதரவாக கட்டுரை எழுதுவதில் எனக்கு எவ்வித இடையூறும் இல்லை ஆனால் 'ஐயா'  வைகோவை தாங்கி பிடிக்கவேண்டும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக அடுத்தவர்கள் மேல் வன்மத்தோடு அவதூறுகளை வீசி தன்னை சரியானவன் என்று காட்டி தனக்கும், தான் சார்ந்த மதிமுக கட்சிக்கும், அந்த கட்சியில் இருக்கும் தன் தந்தைக்கும் சில லாபம் வரும் என்று கணக்கு பார்த்து கட்டுரை எழுதுவதில் தான் பிரச்சனை. வன்மத்தோடு பல பொய்களை பல அவதூறுகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரைக்கு பதில் எழுதவேண்டும் என்று நான் சொன்ன பொழுது அண்ணன்கள் தடுத்தார்கள். ஆனாலும் எழுதியே தீருவது என்று முடிவெடுத்து எழுதுகிறேன். என்னை எழுத வைத்த விஜய்சங்கருக்கு நன்றி.

தான் சீமானை முதலில் நம்பியதை போல சொல்லிவிட்டு பிறகு நாம் தமிழரிடம் கொள்கை குழப்பம் என்கிறார், அடுத்தவர் புகழை அற்பமாக உரிமை கொண்டாடியது என்கிறார், யாரையும் மதிக்காத திமிர் என்கிறார். 'அற்பம், திமிர்' என்ற வார்த்தைகள் எல்லாம் அரசியல் விமர்சனங்களில் வரும் வார்த்தைகள் அல்ல.. வன்மத்தில் வழியே வரும் வார்த்தைகள்.. அந்த வன்மம் 'ஐயா' வைகோவை எதிர்க்கிறார் அண்ணன் சீமான் என்ற நினைப்பில், 'ஐயா' வைகோ மீதான அதீத அபிமானத்தில் உருவான வன்மம். தன் தந்தை மதிமுகவில் இருக்கிறார். தன் திருமணத்தை 'ஐயா' வைகோவை வைத்து நடத்துகிறார். இணையத்தில் எங்கும் அண்ணன் சீமானை ஆதரித்து கட்டுரையோ கருத்தோ தெரிவித்ததாக நான் பார்த்து தெரியவில்லை. ஆனாலும் தான் ஆதரித்து செயல்பட்டதை போல ஆரம்பிக்கிறார். அதாவது கட்டுரை படிப்பவர்களுக்கு தான் ஒரு நடுநிலைவாதி என்று கட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சி. இப்படி வார்த்தைகளில் சூட்சமம் வைக்கும் கலை கலைஞர் செய்வது , அதை வைகோவின் வார்ப்பும் செய்கிறார்..

 முத்துராமலிங்க தேவரை வணங்கிய கணத்தில் தான் அவர் சீமானை விட்டு அந்நியப்பட்டேன் என்கிறார். அண்ணன் சீமான் முத்துராமலிங்க தேவரை வணங்கியதை கண்டு வெறுத்தவர் எப்படி 'ஐயா' வைகோவை தலைவராக ஏற்கிறார் என்று தெரியவில்லை. 'ஐயா' வைகோ முப்பது ஆண்டாக முத்துராமலிங்க தேவர் சமாதிக்கு தவறாமல் வருவதை பெருமையாக சொல்பவர். முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவில் அவரை புகழ் புகழ் என்று புகழ்ந்தவர். (அவருடைய பெருமை பேசுவது, நமது பாதையைச் சரி செய்வதற்காக! ஜாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் தலைவனை மதித்து. 31 ஆவது ஆண்டாக பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன். நான் முதன்முதலாக 1974 ஆம் ஆண்டு பசும்பொன்னுக்குச் சென்றேன். அதன்பின்னர் 1976 ஆம் ஆண்டிலும், 2002, 2003 இந்த மூன்று ஆண்டுகள் தவிர்த்து, ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்கள் 30 ஆம் நாள், பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன்.- வைகோ 2007 அக்டோபர் திங்கள் 30 மதுரை http://www.thevarthalam.com/thevar/?p=540). ஆக விஜய்சங்கரை பொருத்தவரை முத்துராமலிங்க தேவரை வணங்குவது கொள்கை பிறல் என்றால் 'ஐயா' வைகோ அதை முப்பது ஆண்டுகளாக செய்து வருகிறார். அந்த  'ஐயா' வைகோவோடு தான் இவர் நிற்கிறார். என்ன அருமையான கொள்கையாளறாய் இருக்கிறார் விஜய் சங்கர்... சீமான் முத்துராமலிங்க தேவரை வணங்குவதற்கான காரணத்தை ஆயிரம் முறை சொல்லிய பின்னும் மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறார்கள். இந்த இனத்தில் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தமிழ் பாட்டன்களை வணங்குவது பேரன்களின் கடமை. அதை தான் செய்கிறோம். அவர்கள் வாழும் பொழுது சாதியால் பிளவு பட்டு நின்றிருக்கலாம். ஆனால் அவர் பேரன்கள் நாங்கள் ஒன்றாக நின்று அனைவரயும் வணங்குகிறோம்.

தமிழச்சி பற்றி அண்ணன் சீமான் அவரின் தம்பிகளிடம் தவறாக பேசியதாக சொல்கிறார். அவர் தன் தம்பிகளிடம் பேசியது எப்படி இவருக்கு தெரிந்தது என்று தெரியவில்லை. இணையத்தில் தமிழச்சி என்பவர் எப்படியான வார்த்தைகளை பிரயோகிப்பார் என்று பலவருடமாக இணையத்தில் இருப்பவர்கள் அறிவார்கள். மரியாதை என்பது கிஞ்சித்தும் இல்லாதவர் தமிழச்சி. தமிழ்மணத்தில் இருந்து அப்படியான வார்த்தைகளை பிரயோகித்தார் என்று தான் தூக்கி எரியபட்டவர். நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை இழிவான வார்த்தை தான் இருக்கும்.அண்ணன் சீமானை பற்றி தொடர்ந்து மிகவும் அவதூறு சொல்லி வருபவர். ஆனால் சீமான் ஒரு அமைப்பை நிறுவி அதில் மகளிர்  பாசறை அமைத்துநூற்றுக்கணக்கான தமிழ் சகோதிரிகளை வழிநடத்தும் இடத்தில் இருக்கிறார். எத்தனையோ புது புது சகோதிரிகள் நாம் தமிழரின் அரசியல் பாதையில் தினமும் சங்கமிக்கிறார்கள்.. சமீபகால அரசியல் இயக்கத்தில் பெண்கள் அதிக அளவு பங்கேற்கும் இயக்கம் நாம் தமிழர் இயக்கமாகத்தான் இருக்கும். சமீபத்தில் நாம் தமிழர் மகளீர் தின விழா அவர்களே முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடந்தது (http://www.naamtamilar.org/?p=11429).  அதற்கெல்லாம் காரணம் சீமானின் நம்பிக்கைகூரிய நடவடிக்கை. சீமான் அவர்கள் மேல் காட்டும் மரியாதை. அப்படிப்பட்ட சீமான் தான் தமிழச்சியை விமர்சித்தார் என்று தான் கேள்விப்பட்ட விசயத்தை வைத்து விஷம் கக்குகிறார் விஜய்சங்கர்..

சீமானின் மகிழுந்து தமிழக மதுக்கடை வாசலில் நின்றதாம் அதை பார்த்து பெருத்த வேதனைபட்டாராம் இந்த பெருமகன். சீமான் மகிழுந்து நின்றால் சீமான் நின்றதாக அர்த்தமா? மகிழுந்து மதுக்கடையில் கடையில் நின்றால் சீமான் மது அருந்தத்தான் நிற்பதாக அர்த்தமா? எங்கே நின்றது? யார் பார்த்தார்கள்? என்ன ஆதாரம்? ஏதும் இல்லை... அபத்த அவதூறின் உச்சி இது. டாஸ்மாக் மூலமாக தமிழகத்தின் ஆண்டு வருமானம் இருபதுனாயிரம் கோடியாம்.. ஒரு பண்டிகை நாளில் 916 கோடிக்கு விற்பனையாகிறது என்கிறது புள்ளிவிவரங்கள். தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களில் பாதிக்கு பாதி குடிகாரர்கள் ஆகிவிட்டார்கள். திராவிட ஆட்சியாளர்களால் குடிகாரனாக்கபட்டுவிட்டார்கள். இந்த நிலையை போக்க வேண்டும் என்று நாம் தமிழர் மாணவர் பாசறை குறுஞ்செய்தி ஊடகம் மூலமாக அடிக்கடி *மது,புகை பிடித்தல் ,போதை பாக்கு & போதை பொருள்களை அறவே தொட கூடாது.ஏனென்றால், இவைகள் நம் உணர்வை மழுங்க செய்து விடும்.* என்று செய்தி அனுப்புங்கள் என்று சீமான் சொன்னார். அது தான் முதல் குறுஞ்செய்தி அனைவரும் செல்கிறது. தன் தம்பிகளை மதுவால் மழுங்கி போகாதே என்று தடுக்கும் சீமான் அதை செய்வார் என்று எவ்வித ஆதாரமும் இன்றி அவர் வண்டியை நின்றதாக  கதை கட்டுவது பெயரை கெடுக்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட வார்த்தைகள்.. பாவம் அரசியலால் வீழ்த்த முடியாது என்று தெரிந்தால் இப்படித்தான் அதரமற்று பேசி வீழ்த்த முயற்சிப்பார்கள்.

2010 ஆம் ஆண்டு, இலங்கையில் நடக்கவிருந்த இந்தியத் திரைப்பட விழாவிற்கு எதிர்ப்பு பல அமைப்புகள் தெரிவித்தது சரி.. விஜயசங்கர் அசோகன் இருக்கு மதிமுக தெரிவித்தா? மதிமுக போராடியதா? அந்த போராட்ட செய்திகளை திரும்பி பார்த்தல் அதற்காக  ஒரு புறக்கணிப்பு போராட்டமும் இதுவரை மதிமுக செய்ததாக தெரியவில்லை. ஆனால் நாம் தமிழர் போராடியது. மும்பையில் அமிதாப் வீட்டுக்கு முன்னர் மும்பை நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் செய்து அந்த புறக்கணிப்பு போராட்டத்தையே நாடறிய செய்ததது. அமிதாப் IIFA சிறப்புத் தூதர் பதவியை விட்டு விலகியது நாம் தமிழர் அவர் வீட்டு முன்பு நடத்திய போராட்டத்தின் பிறகு தான். அது வட இந்திய ஊடகங்களில் வந்தது (http://www.youtube.com/watch?v=OPrxELyvNPM). அமிதாப் விலகியது தான் IIFA நிகழ்ச்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். இதுவரை எந்த இடத்திலும் இதை நாம் தமிழர் தான் செய்தோம் என்று உரிமை கொண்டாடியதில்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆனால் ஒரு போராட்டமும் செய்யாத (?) மதிமுகவில் இருந்து கொண்டு உரிமை கொண்டாடினோம், அற்பத்தனம் என்றெல்லாம் பேசுகிறார் விஜயசங்கர். என்ன அருகதையில் இதை எல்லாம் பேசுகிறார்? எந்த தமிழ் அமைப்பு இவரிடம் வந்து சொன்னார்கள்? இவருக்கு எப்படி தெரிந்தது? என நாம் திரும்ப கேள்வி கேட்கலாம்..

பெரியார் திராவிடர் கழகம் ஏதோ ஆர்ப்பாட்டம் செய்ததாம் அதை நாம் தமிழர் செய்ததாக சொன்னதாம் அதை கொளத்தூர் மணி மன்னித்தாராம் ஆனால் தொடர்ந்து நாம் தமிழர் அதை செய்கிறது என்கிறார். பெரியார் திகவுடன் இணைத்து இதுவரை மூன்று ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கும் நாம் தமிழர். பெரியார் திக அதில் எந்த விமர்சனமும் வைத்ததில்லை. சமீபத்தில் கூட அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினரை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திக முன்னெடுத்த போராட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கொளத்தூர் மணி அவர்களின் அழைப்பின் பெயரிலேயே கலந்துகொண்டது. அப்படி ஏதும் விமர்சனங்கள் இருந்தால் கொளத்தூர் மணி அழைத்திருக்க மாட்டார். எங்களுக்கும் எங்கள் அண்ணனுக்கும் அண்ணனான கொளத்தூர் மணி அவர்கள் மேல் இருக்கும் மரியாதையிலும் அன்பிலும் அவர் எப்பொழுது கூப்பிட்டாலும் நாம் தமிழர் கலந்து கொள்ளும். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து இரண்டு வருடம் ஆகிறது. இது வரை நாம் தமிழர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களுக்கு எந்த கட்சியையும் கூப்பிட்டு கூட்டம் காட்டியதில்லை. நாம் தமிழர் இளைஞர் பட்டாளம் அனைவரும் வந்தாலே போதுமானது கூட்டம் கூடிவிடும். விஜயசங்கர் அசோகன் மதிமுகவிற்கு தான் மௌத் (mouth) என்று கேள்விப்பட்டேன் பெரியார் திகவிற்கு மௌத் ஆனது எப்பொழுது என்று தெரியவில்லை. திராவிட அரசியலில் முக்கியமாக கலைஞரிடம் ஊறிப்போன புத்தியான சிண்டு முடியும் வேலையை பெரியார் திகவிற்கும் நாம் தமிழருக்கும் இடையே சிரத்தையாக செய்ய முயற்சிக்கிறார் விஜயசங்கர். அதில் அவர் கட்சிக்கு லாபம் என்று கருதுகிறார் போலும்..

தேசியத்தலைவர் கொள்கையை படித்திருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு திரைப்பட நடிகர் விஜய், சூர்யா, சல்மான்கானை போன்றவர்களை ஏன் மன்னித்தீர்கள்? கொள்கை தெரியுமா? இது தான் நீங்கள் தேசிய தலைவரிடம் இருந்து கற்ற பாடமா? அவர்களை எல்லாம் மன்னிக்க நீங்கள் யார்? உங்களை உங்களை யார் மன்னிப்பது ? அப்படி இப்படி என்று கொந்தளித்திருக்கிறார்..அதே கேள்வியை தான் நாங்கள் திரும்பி கேட்கிறோம். அவர்களை எல்லாம் மன்னிக்க சீமான் யார்? அவர்களை சீமான் மன்னித்தால் மற்றவர்கள் எல்லாம் மன்னிக்க வேண்டும் என்ற கட்டாயமா? உங்கள் கட்சி மன்னிக்க வேண்டும் என்ற கட்டாயமா? பல வருடங்களாக கொள்கை பாடம் படிக்கும் 'ஐயா' வைகோ மன்னிக்க வேண்டும் என்ற கட்டாயமா? நீங்கள் போராடி அவர்களை விரட்டி அடித்திருக்கலாமே? .. 'ஐயா' வைகோ அன்று என்ன செய்து கொண்டிருந்தார்? உங்கள் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது? இன்றும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை . போய் போராடுங்களேன்.. மதிமுகவினருக்கு இதை நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன். தயவு செய்து 'ஐயா' வைகோவிடம் பேசி விரைவில் ஒரு போராட்ட அறிவிப்பை வெளியிட்டு இந்த நடிகர்களுக்கு பாடம் கற்பிப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்..

'உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு நீங்கள் தான் தயரிப்பாளர் என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து வருகிறீர்கள். அப்படி நீங்கள் தான் உண்மையான தயாரிப்பாளராக இருந்தால் ஏன் கிரீஸ் மனைவி சங்கீதாவை உங்கள் படத்தில் நடிக்க வைத்தீர்கள்? கிரீஸ்க்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்ன சீமானை ஏன் நடிக்க வைத்தீர்கள்? உடனே படத்தை விட்டு தூக்கி இருக்கலாமே இருவரையும்.. ஏன் செய்யவில்லை? நீங்கள் பட்டியலிட்ட கொள்கை பிடிப்பு, புரட்சியாளனிடம் கற்ற பாடம், அருகதை எல்லாம் உங்களுக்கு இருக்கிறதா? அப்பொழுதே கேட்க நினைத்தேன் நிந்திதேன் என்ற கதை வேறு. அன்றைய தினத்தில் ஓசியாக நடித்து கொடுக்க சீமான் வேண்டும். குறைந்த சம்பளத்தில் நடிக்க சங்கீதா வேண்டும் என்று அமைதியாக இருந்த நீங்கள் மற்றவர்களை பற்றி பேசலாமா? மனித பண்புகளில் அடிப்படை பண்பு நேர்மை மற்றும் நன்றி. இரண்டுமே உங்களிடம் இல்லை. கிரிஷை மன்னிக்ககூடாது என்ற கொள்கையில் நேர்மையாக இருந்திருந்தால்  சீமானை சங்கீதாவையும் படத்தில் இருந்து விலக்கியிருபீர்கள். நன்றி உணர்வு என்று ஒன்று இருந்த்திருந்தால் இனம் சார்ந்து படம் எடுக்கிறீர்கள் என்றதும் உங்களிடம் பணம் வாங்காமல் உங்கள் தளத்திற்கு வந்து நடித்து கொடுத்த சீமானை இப்படி பேசியிருக்க மாட்டீர்கள். இப்படி கட்டுரை எழுதிய பிறகும் நீங்கள் வந்து இனம் சார்ந்து படம் எடுக்கிறேன் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டாலும் கட்டாயம் சீமான் நடித்து தருவார். உதவுவார்.. அது தான் அண்ணன் சீமானின் பண்பு.

நடிகர் விஜய்யோ, சூர்யாவோ, கிரிஷோ எதிர்க்கபடவேண்டியவர்கள் அல்ல திருத்தப்பட வேண்டியவர்கள். முதன் முதலில் Save  Tamils பனியன் அணிந்து தெருவில் வந்து நின்றவர் சூர்யா. போர் உக்கிரமாக நடக்கும் பொழுது போரை நிறுத்த சொல்லி தன் ரசிகர்களை வைத்து உண்ணாவிரதம் இருந்தவர் விஜய். தொழில் முறையில் அவர்கள் பணத்திற்காக செய்யும் தவறுகளை அவர்களிடம் சொல்லி உரிமையோடு தடுக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சல்மான்கானை தன் மகனின் முதல் பட வெளியீட்டுக்கு கூப்பிடுகிறார் பெப்சி விஜயன் அங்கே போய் விழாவை குலைக்க முடியுமா? சல்மான்கானை மேடையில் வைத்து எல்லோரும் புகழ அதை தவிர்த்துவிட்டு என்ன பேசவேண்டுமோ அதை பேசிவிட்டு வந்தார் சீமான். இது நாகரீகம். நாகரீகத்தின் பிறப்பிடம் ஐயா வைகோவின் சீடர் இதை எல்லாம் யோசிக்காமல் பேசினால் எப்படி?.. எல்லா நேரத்திலும் எல்லோரையும் எதிர்ப்பது சரியாகாது.. இதையும் நாங்கள் தேசிய தலைவரிடம் இருந்து தான் கற்றிருக்கிறோம். அவர் எதிரிகளோடு தான் போராடினார். தன் மக்களோடு அல்ல.. யார் எதிரியோ அவர்களை நாம் தமிழர் எதிர்க்கும். அரசியலில் என்ன எதிர் கொள்கையோ அதை அரசியல் ரீதியாக எதிர்க்கும். தொகுதிகள் கம்மியாக கிடைத்தது என்பதற்காக "சூரியன் உதித்தால் இலை கருக்கும்" என்று இனத்தை அழித்த திமுக + காங்கிரஸ் கூட்டணியை மறைமுகமாக ஆதரித்த வேலையை செய்தவர்கள் அல்ல நாம் தமிழர். மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரசை அதன் அதிகாரத்தை எதிர்த்து களமாடியவர்கள், வென்றவர்கள்.

அண்ணன் சீமான் தேசியத்தலைவரோடு இருந்த கணங்களை பற்றி பல்வேறு இடத்தில் பேசிவருகிறார். அது அவருக்கும் தேசியத்தலைவருக்குமே தெரிந்தது. நீங்களோ நானோ அதை பொய் என்றோ உண்மை என்றோ வாதிட முடியாது. முடிவு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் முடிவு செய்து பொய், பிழைப்பு, அருகதை என்று வார்த்தைகளில் விலாசியிருக்கிரீர்கள்.. எனக்கு நீங்கள் தேசியத்தலைவர் மீது வைத்திருக்கும் அன்பு புரிகிறது. அதே நேரம் முன் முடிவெடுத்த உங்கள் வார்த்தைகளில் சீமான் மேல் இருக்கும் காழ்புணர்ச்சியும் புரிகிறது. அப்படி நடந்திருக்கவே சாத்தியமில்லை என்று சொல்ல உங்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை மனதில் கொள்ளாமல் வன்மத்தில் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறீர்கள். ஈழ ஆதரவு தலைவர்கள் எல்லோரும் மேடைகளில் தேசிய தலைவரை சந்தித்த கணங்களை பேசியவற்றை சொல்கிறார்கள். ஏப்ரல் 14 லில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய விருது வழங்கும் விழாவில் அண்ணன் திருமாவும் அந்த கணங்களை விவரித்தார்.. காலம் காலமாக 'ஐயா' வைகோ பல மேடைகளில் அதை சொல்லி வருகிறார். நீங்கள் உண்மையானவராக இருந்தால் அனைவரையும் ஆதாரம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அண்ணன் சீமானை மட்டும் கேட்க வேண்டிய அவசியம் சீமான் திராவிடத்தை எதிர்த்து அரசியல் செய்கிறார் அது மதிமுகவிற்கு 'ஐயா' வைகோவிற்கு உங்கள் அப்பாவிற்கு உங்களுக்கு பாதிப்பு வரும் என்பதால் தான். உங்கள் சுயலாபதிர்க்காக கேள்விகளை ஒரு இடத்தில் கேட்க்காமல் விட்டுவிட்டு இன்னொரு இடத்தில் வந்து எழுதும் அறிவாளியாக நீங்கள் இருந்துவிட்டு போங்கள். ஆனால் தங்களை தங்கள் தலைவரை தவிர எல்லோரும் பொய் சொல்வார்கள் என்று எண்ணிக்கொள்வது முட்டாள்தனம். அத்தோடு உங்களுக்கு உரிமை இல்லை, பெருமை இல்லை, பொறுமை இல்லை என்று முடிவு சொல்ல நீங்கள் நாட்டமை இல்லை.. எழுதுவதற்கு கணினி இருக்கிறது என்பதற்காக தீர்ப்பை நீங்கள் எழுத முடியாது. அதற்கான தகுதி உங்களுக்கு யாரும் வழங்கவும் இல்லை. ஆனால் ஒன்று நிச்சியம் தேசியத்தலைவர் சொன்னாரோ இல்லையோ நான் சொல்லுவேன் ஈழ விடுதலை என் விடுதலை என்று எனக்கும் என்னை போன்ற பல தோழர்களுக்கும் உணர்வூடியவர் சீமான் தான்.

புலம் பெயர் தமிழர்களின் யார் கூத்தடிக்கிறார்கள் என்று நானும் புலம் பெயர்த்து இருப்பதால் எனக்கும நன்றாக தெரியும். புலம் பெயர் மக்களிடம் சீமானுக்கு இருக்கும் அன்பும் மரியாதையும் நீங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை.. நான் சமீபத்தில் கனடா நாம் தமிழர் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவிற்கு சென்றிந்தேன். அமெரிக்கா நாம் தமிழர் சார்பாக என்னை பேச சொன்னார் பாக்கியா அண்ணன். பேசி முடித்து வெளியே வந்த பொழுது இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிங்கள பேரினவாததால் கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மனைவி என் கையை பிடித்துகொண்டு "சீமானை பத்திரமாய் இருக்க சொல்லுங்கள், அவரை மட்டுமே கடைசியாக நம்பி இருக்கிறோம்" என்று சொன்னார்கள். அப்படி பலர் சொன்னார்கள். "அண்ணை கவனம் எமது தலைவருக்கு பிறகு நாங்கள் விரும்பி நம்புவது அவரைத்தான்" என்று சொல்லும் பல இளைஞர்களை அன்று சந்தித்தேன். அவரை பற்றி ஒருவர் புலம்பினாராம். இவர் சொல்கிறார்.. யார் அந்த புலம் பெயர் தமிழர் என்று சொல்லுங்கள். அவரிடம் நேரடியாகவே கேட்போம் என்ன கூத்து என்று. நான் தான் அந்த காரியம் செய்கிறேன் இந்த காரியம் செய்கிறேன் என்று நீங்கள் தம்மபட்டம் அடிக்கும் செய்திகள் கூடத்தான் வர செய்கிறது. அதற்கெல்லாம் உங்களை விமர்சிக்க முடியுமா? அரசியல் ரீதியாக வேண்டுமானால் விமர்சிக்கலாம். ஆனால் அதை உங்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது தான். பரவாயில்லை மேலும் போவோம்.

சீமான் யாரோ புலம் பெயர் தமிழரிடம் பணம் கேட்டாராம் அவர் வந்து இவரிடம் சொன்னாராம். 'ஐயா' வைகோவை அழைக்க கூடாது என்றும் சொன்னாராம்.. பகிரங்க சவாலாகவே இதை விஜயசங்கர் அசோகன் முன் வைக்கிறேன். தன் கட்சிக்காக ஒரு ஈழத்தமிழரிடம் சீமான் பணம் கேட்டார் என்று ஒருவரை ஆதாரத்துடன் முன் நிருந்துங்கள். உங்கள் கட்டுரையில் இருப்பது அனைத்தும் உண்மை என்று ஒத்துகொள்கிறேன். நீங்கள் பணம் கேட்டதற்கான ஆதாரத்தை வைத்தால் நானும் இதுவரை பல முறை பேசியும் பணம் தருகிறேன் என்று சொல்லியும் அண்ணன் சீமான் வேண்டாம் ஏற்கனவே பணம் வருகிறது என்ற குற்றசாட்டை வைக்கிறார்கள் அதனால் வேண்டாம் என்று சொன்ன ஆட்களை நேரடியாகவே பேச வைக்கிறேன். இது சவால்.. இதுவரை அப்படி பணம் பெற்ற அரை நூற்றாண்டு அரசியல்வாதிகளையும் எனக்கு தெரியும். ஆனால் அரசியல் நாகரீகம் கருதி அதை பேசாமல் தவிர்க்கிறேன். என்னில் அவர் அப்படி பணம் பெற்றிருந்தாலும் அது இந்த இனத்துக்காக என்ற அடிப்படை புரிதல் எனக்கு இருக்கிறது. புலிகள் பணத்தை சீமான் கேட்டாராம்.. என்ன ஒரு கேவலமான குற்றசாட்டு. காங்கிரஸ்காரன் இதை சொன்னான்.. அடுத்து திமுக காரன் பேசினான்.. இப்பொழுது மதிமுகவினர்.. இப்படி மனசாட்சி இல்லாமல் ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவதை எங்கிருந்து கற்றீர்கள் விஜயசங்கர்..?  உங்களிடம் சொன்னவர்களை எல்லாம் நம்புவீர்களா? என்னிடமும் தான் பலர் சொல்கிறார்கள் ஐயா வைகோவை பற்றி.. அதை எல்லாம் நான் நம்பி நான் பேசமுடியுமா..? அரசியலாக பேச முயற்சியுங்கள்..

அருகில் இருந்து கேட்டேன், நான் அந்த இடத்தில் இருந்தேன், நானே பார்த்தேன் என்றெல்லாம் இந்த கட்டுரையில் பல இடத்தில் சொல்லியிருக்கிறார்கள். அவை எல்லாம் நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பவைக்க வடித்த வார்த்தைகள். நீங்கள் எப்படிபட்டவர் என்று மேலே ஒவ்வொரு குற்றசாட்டுக்கும் பதில் சொல்லும் பொழுது தோலுரித்திருக்கிறேன்.. நீங்கள் என்ன சார்பில் இருந்து உங்கள் கட்டுரையை வடித்தீர்கள் அதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று இப்பொழுது படிப்பவர்களுக்கு தெரியும். திராவிடம் தமிழ்த்தேசிய விவாதத்தை நீங்கள் தனிப்பட்ட நபருக்கான விவாதமாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறீர்கள். அது இந்த கட்டுரையோடு முடியும் என்று நினைக்கிறேன். முடிய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசியல் களத்தில் 'ஐயா' வைகோவின் தேவையை மனதில் வைத்து என் அண்ணனை போல உள்ளார்ந்த உண்மையான அன்போடு அவரின் தோற்று போன அரசியலை பற்றியும், ஐயாவை பற்றிய தனி மனித விமர்சனங்களையும் தவிர்த்து நீங்கள் வாய்த்த குற்றசாட்டுக்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறேன். ஒரு கருத்தியலை அரசியலில் உருவாக்குவது என்பது மிக கடினம். அந்த பெரும் பணியை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். அதை நீங்கள் ஏதோ உங்கள் தலைவரை எதிர்க்கிறோம் என்று மட்டும் எடுத்துகொள்ள வேண்டாம். இந்த நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்ற நாங்கள் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு எதிராக நீங்கள் அரசியல் ரீதியாக காய் நகர்ந்துங்கள், வாதங்கள் வையுங்கள். அதை விடுத்தது இப்படி ஒருவரின் தனிமனித பண்புகளை சீரழிக்கலாம் அதனால் அவர்களுக்கு பாதிப்பு வரும் என்று பொய்களை கட்டி எழுதி எங்களையும் பதில் எழுத வைத்து நேர விரையம் செய்ய வைக்காதீர்கள்.

#நாங்கள் நடிகர்கள் அல்ல.. இயக்குனர்கள்... அரசியலை இயக்க வந்திருக்கிறோம்.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.